கிணற்று நீரில் மிதந்தாலும்
கவிதையில் மூழ்கிவிட்டது
நிலவு.
காற்றோடு கலந்த மழை சாரலாய்
ஜன்னலுக்குள் நுழைவது போல
என்னை நெருங்குகிறது உன் பார்வை
எதேர்சையாக பார்ப்பது போல
திருமணமெனும் கனவுகண்ட கண்ணகி
உயிர் எனும் சுவரின் பின்னால்
அளவுக்கு அதிகமான கனவுகள்
அறுவடை ஆகாமல் அழிக்கப்படுகின்றன !
யாரையும் யாராலும் முழுமையாக புரிந்துகொள்ள முடிவதில்லை. இந்த உண்மை எல்லோருக்கும் விளங்குவதும் இல்லை. மெய்யாக எதிரில் இருப்பது எப்படியும் நாமாக இருக்க முடியாது, அதுதான் இயற்கை. கண்ணாடியில் தெரியும் உன் பிம்பம் கூட உன்னை மாற்றிதான் பிரதிபலிக்கும் .
அவர்கள் உலகம் வேறு நம் உலகம் வேறு.
நாம் பார்ப்பதை அவர்களும் பார்க்கலாம், ஆனால் அது நாம் பார்த்ததாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் பார்வைக்கு பட்டது இன்னும் அழகாகவோ அல்லது வெறுமையாகவோ இருக்கலாம். ஒவ்வொருவர் பார்வையும் அவரவர் மூளையையும், சூழ்நிலையையும் மற்றும் முன்னேற்பட்ட அனுபவத்தையும் பொறுத்தே மாறுபடும்.
அருகருகே உட்கார்ந்து ரசித்தாலும் ஓவியம் அவரவர் புரிதலில் வேறுபடும். இவ்வுலகம் ஒரு அழகான சிக்கலான மார்டன் ஆர்ட். உங்கள் பார்வையை அடுத்தவர் கண்ணுக்கு காயப்படுத்தி புகுத்தாதீர்கள்.
இங்கே பிறத்தல் ஒரு வரமாக கருதப்படும் அதே நேரம் வாழ்வது மட்டும் ஏன் சாபமாக்கப்படுகிறது.
அடுத்தவர் வாழ்வெனும் தவத்தை, நம் ஆசை எனும் அரம் கொண்டு அறுப்பது பாவமன்றோ.
முதலாளித்துவம் என்னும் இலாப நோக்க கொடுங்கனவு வீடுகளிலும் விளைந்து நிற்கின்றது. பெருமுதலாளியின் தோற்றுப்போன குதிரைகள் துப்பாக்கிக்கு பலியாவதுபோல; பெற்றோர் எதிர்பார்த்த மதிப்பெண் எடுக்க இயலாத பிஞ்சுகள் தற்கொலைக்கு தூண்டப்படுவது போல; இங்கே இயலாதோர் மனித உணர்வுகள் கொல்லப்பட்டு, வேரற்ற மரமாகவோ அல்லது மண்ணுக்கு உரமாகவோ மாற்றப்படுகின்றன.
பேராசையெனும் பித்து அடுத்த உயிரை உண்ணுகிறது.
- அஞ்சலி - என்னை அப்பா என்று முதலில் கூப்பிட்ட உயிருக்காக.